பதிவு செய்த நாள்
14
செப்
2020
03:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, இரண்டு ஆண்டுக்கு முன் இறந்த கோவில் காளையின், நினைவஞ்சலி நிகழ்ச்சியில், காளை அடக்கம் செய்த இடத்தில், கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள, தின்னகழனி கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த, 15 ஆண்டுக்கு முன், காளை மாடு தானமாக வழங்கப்பட்டது. அதை, கிராம மக்கள் பராமரித்து, சாமியாக வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் எருது விடும் விழாக்களில் பங்கேற்று, காளை மாடு பல பரிசுகளை வென்றது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுக்கு முன், பாறை மீது நடந்து சென்ற காளை மாடு தவறி விழுந்து படுகாயம் அடைந்து, சில மாதங்களில் உயிரிழந்தது. கிராம மக்கள் இறந்த காளையை, ஊரின் நடுவே அடக்கம் செய்து, அங்கு பூஜை செய்து வருகின்றனர். இரண்டாமாண்டு நினைவு நாளான நேற்று முன்தினம் மாலை, காளை நல்லடக்கம் செய்த இடத்தில் பந்தல் அமைத்து, வாழை மரங்கள் கட்டி, பூஜை பொருட்கள் கொண்ட தட்டுவரிசையை எடுத்துகொண்டு, மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கை முழங்க, ஊரை சுற்றி வந்து, காளை சமாதியில், கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், காளை மாட்டை கடவுள் போல் நினைத்து வழிபட்டு வருகிறோம். சடங்கு, சம்பிரதாயம் செய்வதன் மூலம், இக்கிராமத்தில் உள்ள கால்நடைகள் நோய், நொடி இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றனர்.