பதிவு செய்த நாள்
15
செப்
2020
09:09
மகாளய அமாவாசை அன்று, வழிபாட்டு தலங்களில், சமூக இடைவெளியுடன், முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய, அறநிலையத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ஆண்டு முழுதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
15 நாட்கள்: புரட்டாசி மாத அமாவாசையே, முன்னோர் பூமிக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்சமாகும். இதில், பட்சம் என்பது, 15 நாட்களை குறிப்பிடும். புரட்டாசி பவுர்ணமியில் துவங்கி, அமாவாசை உள்ள பதினைந்து நாட்களே மகாளய பட்ச காலம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற ஆன்மிக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன.மகாளய கால நாட்களில், நம் முன்னோர் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே, பிதுர்லோகத்தில் இருந்து, நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருவர் என, கூறப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மகாளய பட்சம், 2ம் தேதி துவங்கியது.மகாளய அமாவாசை அன்று தான், நம் முன்னோர்கள் வீடு தேடி வந்து ஆசிர்வதிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க மகாளய அமாவாசை, நாளை மறுதினம் வருகிறது.
அனுமதிக்க வேண்டும்: அன்று தமிழகம் முழுவதும் புண்ணிய நதிகள், சமுத்திரம் போன்ற இடங்களில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்து, தானங்கள் செய்வது வழக்கம்.இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, வழிபாட்டு தலங்களில் ஐந்து மாதங்களுக்கு பின், பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆண்டிற்கு ஒரு முறை வரும் மகாளய அமாவாசையன்று, பித்ருக்களுக்கு திதி கொடுப்பதை, பரம்பரை பரம்பரையாக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.அவ்வாறு திதி கொடுக்க தவறினால், முன்னோர்கள் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, வாழ்க்கையில் முன்னேற்றம் இன்றிபோகும் என்பதும் மக்கள் நம்பிக்கை.எனவே, அறநிலையத்துறை போர்க்கால அடிப்படையில் ஆலோசனை நடத்தி, வழிபாட்டு தலங்களில், சமூக இடைவெளியுடன் திதி கொடுக்க அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பிற்கு உரிய கட்டுப்பாடுகள் விதித்து, ஆன்-லைன் வழியாக அனுமதி வழங்கலாம் என, ஆன்மிக நல விரும்பிகள் கோரியுள்ளனர். - -நமது நிருபர் --