பதிவு செய்த நாள்
15
செப்
2020
02:09
சென்னை : நாமசங்கீர்த்தனத்தில் பிரசித்தி பெற்ற, ஹரிதாஸ்கிரி சுவாமிகளின் உலகளாவிய திருவிழா, ஞானானந்த சேவா சமாஜம் சார்பில், அமெரிக்காவில் நான்கு நாட்கள் கோலாகலமாக நடந்தது.
சத்குரு ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகள், ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஜோதிர்மடத்தின் பீடாதிபதி, ஸ்ரீசிவரத்னகிரி சங்கராச்சாரிய சுவாமிகளிடம், சன்னியாச தீட்சை பெற்றவர்.கலியுகத்தில் இறைவன்அருளை பெறுவதற்கு, நாமசங்கீர்த்தனமே மிகவும் உன்னதமான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில், நாமசங்கீர்த்தனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவருடைய சீடரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள், தம்முடைய குருநாதரின் உத்தரவின்படி, நாடு முழுதும் விஜயம் செய்து, நாமசங்கீர்த்தனத்தால் எண்ணற்ற மக்களை, ஆன்மிகத்தின் பால் திருப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார்.ஹரிதாஸ்கிரி குருஜி யின் திருவிழாவை, ஞானானந்த சேவாசமாஜம் சார்பில், உலகெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்யும் பாகவதர்கள் பலர் இணைந்து, அமெரிக்காவில் நடத்தினர்.
நான்கு நாட்கள் நடந்த விழாவில், கணபதி ஹோமம், சம்பிரதாயப்படி பஜனைகள், திவ்ய நாமம், ராதா கல்யாண மகோற்சவம், குருமார்களின் ஆசியுரை, குருபாதுகா பூஜை ஆகியவை சிறப்பாக அரங்கேறின.மேலும், குழந்தைகளின் பஜனைப் பாடல்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. சேவா சமாஜங்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பாகவதர்கள், தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.