பதிவு செய்த நாள்
16
செப்
2020
05:09
உடுமலை: உடுமலை, திருமூர்த்திமலைக்கு மகாளய அமாவாசைக்கு, திதி, தர்ப்பணம் கொடுக்க அனுமதியில்லை, என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலையில், மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்வர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவிலில் வழக்கமாக நித்ய பூஜைகள் நடந்த நிலையில், பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆண்டு தோறும், தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசைகளில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள், பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, விவசாயிகள் மாட்டு வண்டிகள், ரேக்ளா வண்டிகளில் வந்து, சுவாமிகளை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு, புரட்டாசி மாதம், மகாளய அமாவாசை, நாளை (17ம் தேதி) வருகிறது. தற்போது, கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில், தர்ப்பணம், திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், சிறப்பு பூஜைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக, புரட்டாசி அமாவாசையன்று, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பாலாற்றின் கரையில், திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மாட்டு வண்டிகளிலோ, மற்ற வாகனங்களிலோ, தர்ப்பணம் கொடுக்க வர வேண்டாம், என்றனர்.