“நீ கொடுத்த பணம் திரும்ப வராது...உனக்கு ‘கோவிந்தா’ தான்,” என்று சொல்லக் கேட்டிருப்போம். ‘கோவிந்தா’ என்பது கேலி போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால் கோவிந்த நாமம் மிக உயர்வானது. சபையில் திரவுபதியை துகில் உரிந்த போது, அவள் இரு கைகளைக் குவித்து கோவிந்தா எனக் கதறி அழைத்தாள். இந்த சம்பவம் பற்றி ஒருவர் கேட்டாராம். ‘‘பெருமாளே! நீ தானே திரவுபதியின் மானத்தைக் காத்தாய்?’’ என்று. அதற்கு அவர், ‘‘நான் எங்கே போனேன்? கோவிந்தா என கதறினாளே! அந்த திருநாமம் அல்லவா அவளைப் பாதுகாத்தது’’ என்றார் அதனால் தான் திருப்பாவையில் “குறையொன்றுமில்லாத கோவிந்தா’ என்றாள் ஆண்டாள். இதே போல ஒருமுறை கஜேந்திரன் என்னும் யானை நீர் அருந்த சென்ற போது குளத்தில் முதலையிடம் சிக்கிக் கொண்டது. ‘ஆதிமூலமே’ என பெருமாளை உதவிக்கு அழைக்கு அவரும் கருடனில் எழுந்தருளி காப்பாற்றினார். எனவே குறை தீர்க்கும் கோவிந்த நாமத்தை ஜபியுங்கள்.