மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டு தோறும் நடக்கும் தசாரா பண்டிகை இந்தாண்டு எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் புகழ் பெற்ற தசாரா பண்டிகையின் போது மைசூரு அரண்மனை வளாகத்தில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தாண்டு அக்., 17 ல் பண்டிகை துவங்குகிறது. பண்டிகையின் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தசாராபண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.
ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுககப்பட்டுள்ளன. முக்கியமாக அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலம் வழக்கமாக 4 கி.மீ., தூரம் வரை நடைபெறும். இந்தாண்டு அது தவிர்க்கப்பட்டு அரண்மனை வளாகத்திலேயே நடக்கும். ஊர்வலத்தில் கலந்து கொள்ள தயாராக 5 யானைகள் முகாம்களில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் பாகன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கொரோனா சோதனைக்குப் பிறகு யானைகளை பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர். அக்டோபர் 1ல் யானைகள் அரண்மனை வளாகத்திற்கு வந்தைடையும். அவற்றிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். வழக்கமாக யானைகளின் பயிற்சி மைசூரு அரண்மைனக்கு வெளியே நடைபெறும். இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக அரண்மனை வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. யானைப்பாகன் மற்றும் பயிற்சியாளர்களைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு பயிற்சியின் போது ஒன்றாக இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யானைகளின் பயிற்சியினை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதி கிடையாது. தசாரா பண்டிகை வரும் அக்டோபர் 17 ல் துவங்க உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூட்டம் போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.