பதிவு செய்த நாள்
26
செப்
2020
01:09
திருப்பூர்: கோவில் சொத்து விவரம் கேட்ட பக்தர்களுக்கு, தனி நபர் சொத்து விவரத்தை வழங்க இயலாது என, இந்து சமய அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், மங்கலம் நால்ரோடு பகுதியில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலம், 226/1பி என்ற க.ச., எண்ணில் இடம்பெற்றுள்ளதாக, பக்தர்கள் கண்டறிந்துள்ளனர். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில், சொத்துக்களை கண்டறிந்து மீட்கும் நோக்கில், பக்தர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டுள்ளனர்.அவ்வகையில், மங்கலத்தை சேர்ந்த மோகன்குமார் என்பவர், கோவிலின் சொத்து விவரத்தை கேட்டார்.
அதற்கு, கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை முற்றிலும் வெளியிடுவதால், கோவில் சொத்துக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடியதாக அமையக்கூடும். தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணைப்படி, தகவல்களை வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். கோவில் சொத்துக்களை மீட்கலாம் என்ற பக்தர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை விதிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையே இவ்வாறு, பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளதாக, பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மங்கலம் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கண்டறிந்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, கம்பிவேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.