பதிவு செய்த நாள்
26
செப்
2020
01:09
ஓசூர்: தளி அருகே, கும்ளாபுரம் கவுரம்மா தேவி கோவில் திருவிழாவை முன்னிட்டு, கவுரம்மா, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக தேரில் எடுத்து சென்ற பக்தர்கள், ஏரியில் கரைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரம்மா கோவிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர், கவுரம்மா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு மாதம் சிறப்பு பூஜைகள் செய்து ஏரியில் கரைப்பது வழக்கம்.
கடந்த மாதம், 22ல் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் போது, கும்ளாபுரம் கவுரம்மா கோவிலில், விநாயகர், கவுரம்மா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு விநாயகர், கவுரம்மாவிற்கு தனித்தனியாக தேர் தயார் செய்து, அதில் விநாயகர், கவுரம்மா சிலைகளை வைத்து, 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமந்தவாறு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது, சிவானந்த சிவாச்சாரியார் மடாதிபதி ஆசிரமத்தில், சுவாமிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக, தேர்களை சுமந்து சென்ற பக்தர்கள், கும்ளாபுரம் ஏரியில் விநாயகர், கவுரம்மா சிலைகளை கரைத்தனர். தளி, தேன்கனிக்கோட்டை, பேலாளம், ஆச்சுபாலா, கோபனப்பள்ளி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.