பதிவு செய்த நாள்
28
செப்
2020
04:09
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளுக்காக ராஜகோபுரம் முன் பந்தக்கால் நடும் விழா நடந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், 10 நாட்கள் கொண்டாடப்படும் தீபத்திரு விழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் மற்றும், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இதை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்தாண்டு கொரோனாவால், தீபத்திருவிழா அரசு விதிக்கும் நிபந்தனையின்படி வரும் நவ., 17ல், துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி, 29ல், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க, இன்று ராஜகோபுரம் முன் பந்தக்கால் நடும் விழா நடந்தது. கொரோனா காரணமாக, பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை, குறைந்த எண்ணிக்கையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் முறைதாரர்கள் மட்டுமே முக கவசம் அணிந்து கொண்டு, கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர்.