பதிவு செய்த நாள்
01
அக்
2020
02:10
சேலம்: கொள்ளையர்களிடம் மீட்ட ஐம்பொன் நடராஜர் சிலையை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு, போலீசார் எடுத்துச்சென்றனர். சேலம், மரவனேரி, உடையப்பா காலனியை சேர்ந்தவர் செல்வகுமார், 54. இவர், வீட்டின் பூஜை அறையில், ஐம்பொன் நடராஜர் சிலையை வைத்து வழிபட்டு வந்தார். இதையறிந்த கொள்ளையர்கள், 2013 செப்., 20 நள்ளிரவில், அச்சிலையை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக விசாரித்த, அஸ்தம்பட்டி போலீசார், 11 பேரை கைது செய்து, சிலையை மீட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின், அச்சிலை, சேலம், சுகவனேஸ்வரர் கோவில் வளாக காப்பக அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சேலம் வழக்கும், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், சிலையை அங்கு ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, உதவி கமிஷனர் எட்டியப்பன் தலைமையில் போலீசார், மாஜிஸ்திரேட் ராஜபிரபு முன், சிலையை ஆஜர்படுத்தினர். அவர் உத்தரவிட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சிலை கும்பகோணம் எடுத்துச்செல்லப்பட்டது.