பதிவு செய்த நாள்
04
அக்
2020
04:10
புதுடில்லி; பாக்., அரசு, கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா பாதையை மீண்டும் திறந்துள்ளது. ஆனால், இந்திய பகுதியில் பாதை திறப்பு குறித்து, மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், நரோவல் மாவட்டத்தில், கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா உள்ளது. சீக்கிய மத குருவான, குருநானக் தேவ், கடைசி, 18 ஆண்டுகள் இங்கு தான் தங்கியிருந்தார். இந்த குருத்வாராவுக்கு, அனைத்து மதத்தினரும் விசா இல்லாமல் செல்ல, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா காரணமாக, மார்ச், 16ம் தேதி, கர்தார்பூர் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததால், பாக்., அரசு, கர்தார்பூர் பாதையை மீண்டும் திறந்துள்ளது. ஆனால், மத்திய அரசு, இது குறித்து இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. இது பற்றி, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:கொரோனா பரவல் நிலவரம், ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் தான், பாதையை மீண்டும் திறப்பது குறித்து, மத்திய அரசு முடிவெடுக்கும். இது தொடர்பாக, மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகங்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.