ஞானி ஒருவரைச் சந்திக்க இளைஞன் ஒருவன் ஒட்டகத்தில் புறப்பட்டான். நீண்ட துாரம் பயணம் செய்து, அவர் இருக்கும் இடத்தை அடைந்தான். ஒட்டகத்தை விட்டு இறங்கியதும், அதைக் கட்டிப் போடாமல் ஞானியிடம் சென்றான். ‘‘ இறைவனை முழுமையாக நம்புபவன் நான். எல்லா உயிர்களையும் காப்பது அவனே. இப்போது கூட... என் ஒட்டகத்தை கட்டிப் போடாமல் உங்களைக் காண வந்திருக்கிறேன். ஏனெனில் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்குண்டு’’ என பெருமையுடன் சொன்னான். “ஒட்டகத்தைக் கட்டாவிட்டால் அது வேறு யாருடைய ஒட்டகத்திற்காவது வைக்கப்பட்ட உணவில் வாயை வைக்கும். இதனால் அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். கால்போன போக்கில் ஒட்டகம் செல்லவும் வாய்ப்புண்டு. சிந்திக்கும் அறிவை நமக்கு கொடுத்திருக்கிறான். அதைப் பயன்படுத்தாமல் இருப்பது யார் குற்றம்? முடிந்த கடமையை நாம் முதலில் செய்ய வேண்டும். அதை விட்டு இழப்பு நேர்ந்த பின் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. கடமையை ஒழுங்காகச் செய்வதையே இறைவன் எதிர்பார்க்கிறான்’’ என்றார் ஞானி.