பாற்கடலில் பாம்பணையில் மகாவிஷ்ணு பள்ளி கொண்டிருந்தார். அவரது திருவடியில் ஸ்ரீதேவி, பூமிதேவியும் அமர்ந்திருந்தனர். பூமியில் தர்மத்தை நிலைநிறுத்த பல அவதாரங்கள் எடுத்த மகாவிஷ்ணு, அர்ச்சாவதாரமாக (வழிபடத்தக்க சிலையாக) பூமிக்கு வர விரும்பி ஸ்ரீதேவியை அழைத்தார். ‘‘ ராம அவதாரத்தின் போது சீதையாக அவதரித்து, நான் பட்டபாடு போதும் சுவாமி! இப்போது என்னை வேறு எந்த ராவணனிடத்தில் ஒப்படைக்கப் போகிறீரோ’’ என்று அவள் கோபித்தாள். அதன்பின் விஷ்ணுவின் பார்வை பூமிதேவியின் பக்கம் திரும்பியது. மறுப்பு தெரிவிக்காமல் பொறுமையுடன் சம்மதித்தாள். அவளே கோதை ஆண்டாளாக ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதரித்தாள். அவள் கிருஷ்ணர் மீது பாடிய திருப்பாவை என்னும் 30 பாசுரங்களை படித்தால் வேதம் முழுவதையும் படித்த புண்ணியம் கிடைக்கும்.