அந்தக் காலத்தில் மன்னர்கள் அவைக்கு வந்ததும் நாட்டு நடப்பைப் பற்றி அறிந்து கொள்வது வழக்கம். அதைப் போலவே, திருப்பதி வெங்கடேசப் பெருமாளும் அன்றாடம் கோயில் நடப்பைத் தெரிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். கொலுவு சீனிவாசர் என்னும் மூர்த்தியாக கொலுவு மண்டபத்திற்கு நாள்தோறும் காலையில் எழுந்தருள்வார். மூலவரே இப்பெயரில் இருப்பதாக ஐதீகம். வெள்ளிப் பல்லக்கில் வெள்ளிக்குடை பிடித்து வரும் இவருக்கு முதலில் அர்ச்சனை நடத்துவர். எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நிவேதனம் செய்யப்படும். இன்று நாள் எப்படி? என்பதை தெரிவிக்கும் விதத்தில் சுருக்கமாக பஞ்சாங்க விபரம் வாசிக்கப்படும். நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற ஐந்தும் இதில் இடம்பெற்றிருக்கும். பின்னர், முந்தையநாள் உண்டியல் வருமானம் பற்றிய விபரத்தை வாசிப்பார்கள். கல்யாணச் செலவுக்காக குபேரனிடம் வாங்கிய கடனில் எவ்வளவு அடைபடுகிறது என்பதை பெருமாள் தெரிந்து கொள்வதற்காகவே கணக்கு வாசிக்கப்படுவதாக ஐதீகம். கொலுவு சீனிவாசரை தரிசிப்பதற்கு பக்தர்களை அனுமதிப்பதில்லை.