தெய்வ வழிபாட்டிற்கு நேரம் காலமே கிடையாது. நற்றவா உன்னை நான் மறக்கிணும் சொல்லும் நா நமசிவாயவே என்கிறார் சுந்தரர். மனத்தளவில் மறந்திருந்தாலும், நமது நாக்கு இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். நான் நடப்பது உனது ஆலயத்தை வலம் வருதலாகவும், உண்பது உனக்கு யாகம் செய்வதாகவும் ஆகட்டும் என்கிறார் ஆதிசங்கரர். வழிபாடு என்பது பூஜை செய்வது மட்டும் கிடையாது. எப்பொழுதும் தெய்வசிந்தனையுடன் இருப்பதும் தான். காலை மாலை இரு வேளையும் வழிபாடு செய்ய வேண்டும். எப்பொழுதும் இறைவனை மனதில் சிந்தித்தும், நாவினால் அவர் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.