பதிவு செய்த நாள்
15
அக்
2020
05:10
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷத்தையொட்டி நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரம் நடந்தது.
பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனியில் உள்ள, மஹாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, நேற்று மாலை, 4:00 மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மூலவர் மஹாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று ஊரடங்கால், பூஜையில் சில பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர், காரிமங்கலம் அண்ணாமலையார் மலைக்கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜை நடந்தன.
* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள, ஸ்ரீவாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.