வத்திராயிருப்பு: சதுரகிரியில் நவராத்திரி திருவிழா நாளை (அக்.17) ஆனந்தவல்லி அம்மன் மண்டபத்தில் காப்புக்கட்டுடன் துவங்குகிறது.
மதுரை மாவட்டம் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடக்கும் நவராத்திரி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் முதல் நாளில் காப்பு கட்டி ஒன்பது நாட்கள் கோயிலிலேயே தங்கி விரதம் இருப்பார்கள். இறுதிநாளில் அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். விழா நாட்களில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் காட்சியளிப்பார். இவ்விழாவில் நாளை காலை அம்மன் மண்டபத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதல், சிறப்பு அலங்கார வழிபாடுகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர். இவ்விழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், என ஹிந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.