நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ள நவராத்திரி பூஜைகளுக்காக பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதிதேவி, முருகன், முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் வாகனங்களில் பவனியாக நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. அன்று இரவு குழித்துறையில் தங்கிய பின்னர் நேற்று காலை மாவட்ட எல்லையான களியக்காவிளை வந்தது. இங்கு கேரளா போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்திய பின்னர் கேரள அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் நெய்யாற்றிகரை கிருஷ்ணசுவாமி கோயிலில் தங்கியது. இன்று காலை பவனி புறப்பட்டு திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலை வந்தடையும். இங்கு பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட உடைவாளை மன்னர் திருநாள் மார்த்தாண்டவர்மா பெற்றுக்கொள்வார். சரஸ்வதிதேவி நவராத்திரி மண்டபத்தில் வைக்கப்பட்டு நாளை நவராத்திரி பூஜை தொடங்கும். முருகன் ஆரியசாலை கோயிலிலும், முன்னுதித்த நங்கை செந்திட்டை கோயிலிலும் வைக்கப்படும்.