பதிவு செய்த நாள்
16
அக்
2020
04:10
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, வாகனங்கள் இறங்குவதற்கு, 9.10 ரூபாய் கோடியில், புதிய தார்ச்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் வாகனங்கள் செல்ல வசதியாக மலைப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒரே மலைப்பாதை மட்டுமே உள்ளதால், முக்கிய திருவிழா மற்றும் கிருத்திகை நாட்களில் வாகனங்கள் சென்று வரும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை தவிர்க்கும் வகையில், மலையில் இருந்து இறங்குவதற்கு தனியாக புதிய மலைப்பாதை அமைக்க, கோவில் நிர்வாகம் தீர்மானித்து, மண் சாலை அமைத்தது.அதன் பின், மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு ஹிந்து அறநிலைய துறை ஆணையருக்கு, கோவில் நிர்வாகம் பரிந்துரை செய்தது.இதற்கு, ஹிந்து அறநிலைய துறை ஆணையர் மற்றும் தமிழக அரசும் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மலைக்கோவிலில் இருந்து, வாகனங்கள் இறங்குவதற்கு புதிய தார்ச்சாலை அமைக்க, கோவில் பொது நிதியில் இருந்து, 9.10 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்து அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.ஓரிரு நாளில், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம், புதிய தார்ச் சாலைக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும். புதிய தார்ச்சாலை, 7.5 அகலம், 1,380 மீட்டர் நிளத்திற்கு அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.