திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்றுஇரவு பெரிய சேஷ வாகனத்தில் கோவிந்தராஜர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார்.
திருமலையில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும்.இது மூன்றாவது வருடம் என்பதால் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. திருமலையில் நடைபெறும் விழாக்களிலேயே மிகவும் விசேஷமானது பிரம்மோற்சவ விழாதான் பல லட்சம் மக்கள் கூடுவர் பல்வேறு மாநில கலைநிகழ்வுகள் நடைபெறும். கொரோனா தொற்று பயம் காரணமாக பக்தர்களை தவிர்க்கும் பொருட்டு கோவிலுக்குள்ளேயே விழாக்கள் நடைபெற்றது. கோவிலின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நவராத்திரி பிரம்மோற்சவம் மாடவீதிகளில் நடத்தலாம் என்றும் குறைந்த அளவு பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தனர். ஆனால் கோவிலின் புதிய நிர்வாக அதிகாரியாக கடந்த வாரம் பொறுப்பேற்ற ஜவஹர் ரெட்டி இன்னும் கொரோனா தொற்று அபாயம் இருப்பதால் கடந்த மாதம் நடைபெற்றது போலவே இந்த மாதமும் கோவிலுக்குள்ளேயே விழாவினை நடத்த உத்திரவிட்டார். அதன்படி நவராத்திரி பிரம்மோற்சவ முதல்நாளான இன்று இரவ 8 மணியளவில் உற்சவரான மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். விழாவினை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது கோவிலுக்கு உள்ளே விழா நடக்கும் இடம் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமான எஸ்விபிசி சானலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.