பதிவு செய்த நாள்
17
அக்
2020
02:10
திருவண்ணாமலை: ‘திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், நவராத்திரி விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை’ என, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நவராத்திரி விழா தொடங்குகிறது. வரும், 25 வரை, தொடர்ந்து ஒன்பது நாட்களும், பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இன்று இரவு, 8:00 மணிக்கு பராசக்தி அம்மன் அலங்காரத்தில், ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
நாளை, ராஜராஜேஸ்வரி அலங்காரம், 19ல், கெஜலட்சுமி அலங்காரம், 20ல், மனோன்மணி அலங்காரம், 21ல், ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி காட்சி தருதல், அன்று மாலை பஞ்ச மூர்த்திகள் அபி ேஷகம், 22ல், ஆண்டாள் அலங்காரம், 23ல், சரஸ்வதி அலங்காரம், 24ல் லிங்க பூஜை அலங்காரம், 25ல், மகிஷாசூரமர்த்தினி அலங்காரம், அன்று மாலை உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. விழா நிறைவாக வரும், 26, விஜயதசமி அன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் அபி ேஷகம் நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவராத்திரி விழாவில், பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. வழக்கம்போல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை பக்தர்கள் தரிசிக்கலாம். நவராத்திரி விழா நடக்கும் அலங்கார மண்டபத்திற்குள், பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.