பதிவு செய்த நாள்
18
அக்
2020
03:10
சபரிமலை: சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், நேற்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
சபரிமலையில் அடுத்த மாதம் கார்த்திகை, ௧ம் தேதி பதவி ஏற்க வேண்டிய புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு, நேற்று சன்னிதானத்தில் நடந்தது. தேவசம்போர்டு நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பேரின் பெயரை துண்டு சீட்டில் எழுதி ஒரு பாத்திரத்தில் போடப்பட்டது. மற்றொரு பாத்திரத்தில் எட்டு வெற்று சீட்டுகளும், ஒரு சீட்டில் மேல்சாந்தி என்று எழுதியும் போடப்பட்டது.
தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்திய பின், பந்தளம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கவுசிக் வர்மா, தலா இரண்டு பாத்திரத்திலும் இருந்து துண்டு சீட்டுகளை எடுத்தார். ஏழாவது முறை எடுக்கப்பட்ட சீட்டில், திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லுாரைச் சேர்ந்த ஜெயராஜ் போற்றி சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதுபோல மாளிகைப்புறத்தில் நடந்த குலுக்கல் தேர்வில், எர்ணாகுளம் அங்கமாலியைச் சேர்ந்த ரெஜிகுமார் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கார்த்திகை,1ம் தேதி முதல் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வர். நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு, ஆணையர் திருமேனி, ஐகோர்ட் நியமித்த பார்வையாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நாயர், சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐப்பசி பூஜை சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகள் துவங்கின. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களிடம் இருந்து நெய் வாங்கவும், பிரசாதம் மற்றும் அப்பம், அரவணை வழங்கவும் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டு இருந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். அக்., 21 வரை நடை திறந்திருக்கும்.