பதிவு செய்த நாள்
18
அக்
2020
03:10
அறிவுக்கு ஆற்றல் தரும் : நவராத்திரி மூன்றாம் நாள்
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது மனநிம்மதியும், மகிழ்ச்சியும் தான். இவையில்லாமல், வேறு எவ்வளவு சிறப்புகள் நம்மிடம் இருந்தாலும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடையாது. நிம்மதி, மகிழ்ச்சி
ஆகியவற்றை தருவது எது எனக் கேட்டால், மனித அறிவு தான் என்கின்றன சாஸ்திரங்கள்.
புலன்கள் அறிவிப்பதையெல்லாம், மனம் ஆசைப்படுகிறது; அப்படி ஆசைப்படும் மனதிற்கு நல்லது, கெட்டது எனும் வேறுபாட்டை உணர்த்தி, நல்வழியில் போகச் செய்வது அறிவு. இது, மிகவும் கடினமான காரியம். இதைச் செய்ய, அறிவுக்கு நிறைய ஆற்றல் வேண்டும்; அதை, இறைவனால் மட்டுமே வழங்க முடியும்.
என் அறிவு மங்கும் போதெல்லாம், மனதை நல்வழிப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஆற்றலைத் தந்து, அறிவை துாண்ட வேண்டும்... என, இறைவனிடம் பிரார்த்திப்பதே, காயத்ரி மந்திரத்தின் உட்பொருள்.
மனம் ஆசைப்படுவதையெல்லாம் அனுபவிக்க விரும்பினால், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். தவறான ஆசைகளால் தீய வழிகளுக்குச் செல்பவர்களும், அவர்களால் பாதிக்கப்படுபவர்களும், மகிழ்ச்சியையும்,
நிம்மதியையும் இழந்து, வாடி நிற்பதைக் காணலாம். அறிவுக்குக் கட்டுப்படாமல், மனம் போன போக்கில், நல்லது, கெட்டது வேறுபாடு இல்லாமல் செயல்படுபவர்களை, எருமை என்று
குறிப்பிடுவதற்கு காரணமும் இது தான்.
மிருகங்களிலும் கீழ்மையான பழக்கங்களையுடையது, மகிஷம் எனும் எருமை. அம்பிகையின் வரலாற்றில், மஹிஷாசுர வதம் என்பது, அறியாமையால் தவறுகள் செய்யும் மனிதர்களின் மனதை துாய்மைப்படுத்தி, நல்லறிவை தந்து, நன்னெறிப்பட்ட வாழ்க்கையை அன்னை அருளுகிறாள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.ரம்பாசுரன் என்பவன், அம்பிகையை நோக்கி கடும்
தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய அன்னை, என்ன வரம் வேண்டும்? எனக் கேட்டாள். உனக்கு வாகனமாக இருக்கும் வகையில், எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என, வேண்டினான். அன்னையும், அவ்வாறே ஆகட்டும் என, அருளினாள்.
சில காலம் கழித்து, அவனுக்கு விசித்திரமான தோற்றத்தில், குழந்தை பிறக்கிறது. எருமைத் தலையும், அரக்க வடிவமும் கொண்டு பிறந்த அக்குழந்தையைக் கண்டு மனம் வருந்திய ரம்பாசுரனுக்கு, முற்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாய், இப்படி பிறந்து
உள்ளான்; காலம் வரும் போது, இவனது அரக்க குணத்தையும், தமோ குணத்தையும் அழித்து, நாம் அவன் தலையில் நின்று அருள் புரிவோம் என, அசரீரியாகக் கூறினாள் அம்பிகை.
காலம் கடந்தது. மஹிஷன் அரசனானான்.
தேவர்களை வென்று, மூவுலகத்தையும் ஆட்சி செய்தான். எல்லாரையும் துன்புறுத்தி இன்புற்றான். யாராலும் அவனை வெல்ல முடியவில்லை. நாளுக்கு நாள், அவனது தீயச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே வந்தது.தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மனும், விஷ்ணுவும், தேவர்களுமாக எல்லாரும் சேர்ந்து, சிவனிடம் முறையிட்டனர்.
மஹிஷனை அழிக்க உபாயம் தேடி ஆலோசிக்கும்போது, எல்லா தேவர்களின் உடலிலிருந்தும் ஒளி வெளிப்பட்டு, ஒன்று சேர்ந்து, ஒரு பெண்ணாக மாறியது. பதினெட்டு கரங்களும், அவற்றில் ஆயுதமும் கொண்டு, மஹிஷாசுரனை அழித்து, மூவுலகையும் காப்பாற்றுவதாகக் கூறி, போருக்குப் புறப்பட்டாள். மஹிஷனின் அறிவை ஆணவம் மறைத்திருந்ததால், வந்திருப்பது ஜகன்மாதா என்று அறியாமல், கடுமையாக போர் புரிந்தான்.
அவனது தலையை வெட்டும் போதெல்லாம், வேறு தலை முளைத்து, மீண்டும் போரிட்டான்.கடைசியாக, துர்கா தேவி ஒரு கையால் சூலாயுதம் கொண்டு, அவன் உடலைப் பிளந்தும், மற்றொரு கையால் வாள் கொண்டு, அவனது தலையைச் சீவியும், போரை முடிவுக்குக் கொண்டு வரும் சமயம், அம்பிகையின் கரம் பட்ட தாலும், உடலிலிருந்த கெட்ட ரத்தம் வெளியேறியதாலும், தமோ குணமும், அசுர குணமும் அழிந்து, தன் தந்தையின் வரத்தை, தமக்கு அருளுமாறு அன்னையை வேண்ட, ஸ்ரீமஹிஷாசுர மர்த்தினியாக, பதினெட்டு கரங்களுடன், சாந்தரூபம் கொண்டு, ஸ்ரீமஹாலட்சுமி,
துர்கையாக, மஹிஷனின் தலையில் நின்று அருள்புரிந்தாள்.தேவர்கள் பூமாரிப் பொழிந்து, ஜய... ஜய... எனும் வெற்றி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.இன்று, மஹிஷாசுர மர்த்தினியை வழிபட்டு, நம்மிடம் உள்ள அறியாமை மற்றும் தீய சிந்தனைகளை அகற்றி, நல்லறிவு பெற்று, எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி தோஷங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவோம்.
பூஜிக்க வேண்டிய முறை :தாம்பாளத்தில் எட்டிதழ் தாமரைக் கோலமிட்டு நடுவிலும், இதழ்களிலுமாக ஒன்பது தீபங்கள் ஏற்றி வைத்து,ஓம் ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தின்யை நமஹ... என்று அர்ச்சனை செய்யவும்.
நிவேதனம்: மூன்றாம் நாள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
மாதர்மே மதுகைடபக்னி
மஹிஷ ப்ராணாபஹாரோத்யமே|
ஹேலாநிர்மித துாம்ரலோசன
வதே ஹே சண்டமுண்டார்த்தினி|
நிஸ்ஸேஷீக்ருத ரக்தபீஜ தநுஜே
நித்யே நிசும்பாபஹே|
சும்பத்வம்சினி ஸம்ஹராசு
துரிதம் துர்க்கே நமஸ்தேம்பிகே||
- ஸ்ரீதத்துவ நீதி
பொருள்: ஹே மஹிஷாசுர மர்த்தினி தாயே!
மதுகைடபன், துாம்ரலோசனன், சண்டன், முண்டன், ரக்தபீஜன், சும்பன் மற்றும் நிசும்பன் போன்ற கொடிய அரக்கர்களை அழித்த உன் ஆற்றல், எங்கள் துன்பங்களை சீக்கிரம் நீக்கி, இன்பம் அருள வேண்டுகிறோம்.
பூஜை நேரம் : மாலை 5:00 முதல் இரவு 7:00 வரை
நவராத்திரி மூன்றாம் நாளுக்கான நிவேதனம்: நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன்வந்தார். ஒவ்வொரு
பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார்.
கல்கண்டு பொங்கல்!
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 100 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
பால் - 500 மில்லி
தண்ணீர் - 500 மில்லி
கல்கண்டு - 200 கிராம்
ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
முந்திரி - 20 கிராம்
திராட்சை - 20 கிராம்
அரிசி, பாசிப்பருப்பை, தண்ணீர் மற்றும் பாலுடன் சேர்த்து வேக வைக்கவும். இதில், கல்கண்டுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். வாணலியில் நெய் சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து, கல்கண்டு பொங்கலில் சேர்க்கவும்.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2,483.7; கார்போஹைட்ரேட், 385; புரதம், 58.4; கொழுப்பு, 77.1.
மொச்சை சுண்டல்!
தேவையான பொருட்கள்
காய்ந்த மொச்சை - 500 கிராம்
எண்ணெய் - 20 மில்லி
கடுகு - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 10 கிராம்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 150 கிராம்
செய்முறை
காய்ந்த மொச்சையை எட்டு மணி நேரம் ஊற வைத்து, வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் வறுக்கவும். இதில், வேக வைத்த மொச்சை, உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய் சேர்க்கவும்!இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2,331.7; கார்போஹைட்ரேட், 247; புரதம், 116.6; கொழுப்பு, 91.8.
பெண்களுக்கு :சுமங்கலிகளுக்கு பச்சை நிற ரவிக்கைத் துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி, ஆரத்தி எடுத்து பூஜையை முடிக்கவும்.