பதிவு செய்த நாள்
19
அக்
2020
12:10
திருவொற்றியூர் : வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி திருவிழா கொடியேற்றம், பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ஆண்டுதோறும், நவராத்திரி திருவிழா, இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்களின்றி எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
விநாயகர், சண்டிகேஸ்வரர், உற்சவ தாயார் தபசு அலங்காரத்தில், கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின், கொடிமரம், மஞ்சள் நீர், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட புனித பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டன. கொடிமரம் அலங்கரிக்கப்பட்ட பின், மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. பின், உற்சவ தாயார், கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து, நிலையை அடைந்தார். நவராத்திரி நாட்களில், உற்சவ தாயார், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமாமகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, சரஸ்வதி, மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வருவார்.வரும், 26ம் தேதி, கொடியிறக்கத்துடன், நவராத்திரி திருவிழா நிறைவுறும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்நிகழ்ச்சிகளில், பக்தர்கள் பங்கேற்ற அனுமதி கிடையாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.