பதிவு செய்த நாள்
19
அக்
2020
05:10
திருவாலங்காடு : ஏழை, எளிய மக்களின் வசதிக்காக வடாரண்யேஸ்வரர் கோவில் சார்பில், 2.35 கோடி ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தணி உபகோவிலான வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில் நிர்வாகம் சார்பில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், திருமண மண்டபம் கட்டி, குறைந்த வாடகைக்கு விட தீர்மானித்தது.இதையடுத்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரில், கோவிலுக்கு சொந்தமான, 7,000 சதுர அடி நிலப்பரப்பில், திருமண மண்டபம் கோவில் நிதியில் இருந்து, 2.35 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட உள்ளது. கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருவாலங்காட்டில், திருமண மண்டபம் கட்டுவதற்கு ஹிந்து அறநிலைய துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கான அரசாணையும் வழங்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.