மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூரில் மகிஷாசுரமர்த்தினி கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் கோல்ஹா என்ற அசுரன் தவ வலிமையால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்த அம்பிகை அசுரனை வதம் செய்தாள். மரணத்தருவாயில், “அம்மா! என்னை ஒரு பழமாகக் கருதி ஏற்றுக் கொள். உனக்கு பூஜை நடக்கும் காலங்களில் எல்லா மக்களும் பழம் படைக்க வேண்டும். மனிதர்கள் அனைவரும் பிறக்கும் போது, பழத்திற்குள் இருக்கும் இனிப்பான சதை போல நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் கர்வம் என்ற தோல் அதை மறைத்துள்ளது. அதை அகற்றினால் இனிமை வெளிப்படும். இதை உணரும் வகையில் பழம் படைக்க அனுமதி கொடு’’ என வேண்ட அம்பிகை கோரிக்கையை ஏற்றாள். அன்று முதல் வழிபாட்டில் பழம் படைக்கும் வழக்கம் தோன்றியது.