நவராத்திரி விரதம் பெண்களுக்கு உரியது. ‘நவம்’ என்ற சொல்லுக்கு ‘ஒன்பது’ என்றும், ‘புதியது’ என்றும் இரு பொருள் உண்டு. ஒரு நாளை பகல், இரவு என பிரிப்பர். பகல் சிவபெருமானின் அம்சம். இரவு பராசக்தியின் அம்சம். எனவே தேவியைக் கொண்டாட ஏற்ற நேரம் இரவு, பகலில் உயிர்த்தெழுந்த உயிர்களை, இரவு வடிவான சக்தி அமைதியாக உறங்கச்செய்து தாலாட்டுகிறாள். எல்லா உயிர்களும் உறங்கும் காலத்தில், தான் உறங்காமல் இருந்து காப்பாற்றுகின்றாள். ‘சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதி! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன்’ என வேதம் போற்றுகிறது. வேதங்கள் காட்டிய வழியில் இரவு நேர விழாவாக நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.