பதிவு செய்த நாள்
25
அக்
2020
03:10
சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.
01. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு
வெளியீடு: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
மதுரை.
பக்கம்: 216 விலை: ரூ.50
திருக்கோவில் வெளியீடாக வந்துள்ள நுால். மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தல வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. காப்பில் துவங்குகிறது. கால வரிசைப்படி வரலாற்று தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பாண்டியர் ஆட்சியில் துவங்கி நாயக்க மன்னர்கள் ஆட்சி வரை உள்ளது.கோவிலில் வழிபடும் முறை, தினசரி பூஜை விபரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளது. திருவிழாக்கள், உப கோவில் விபரங்கள், கோவில் அமைப்பு முறை, நடந்துள்ள திருப்பணிகள் போன்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன. தலக்குறிப்பில், இலக்கியம், கல்வெட்டு, ஓவிய, சிற்பங்கள் பற்றிய தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. கோவில் சார்ந்த ஏராளமான வண்ணப்படங்கள் இடம்பெற்று உள்ளன. மிகத் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றிய முழு விபரங்களை உள்ளடக்கியது. பக்தர்களுக்கு மிகவும் உதவும்.
02. திருவாசகப் பயணம் முதல் சுற்று
ஆசிரியர்: முனைவர் அ.நாகலிங்கம்
வெளியீடு: ஐயா பச்சையப்பர் இல்லம்
3, பேராசிரியர் தெரு, சோழன் நகர்,
பட்டாபிராம், சென்னை - 72.
தொலைபேசி: 044 - 2685 2884
பக்கம்: 96 விலை: ரூ.80
சிவ புராணம், கீர்த்தித்திரு அகவல் பிரிவுகளுக்கு பாடலைப் பிரித்து, அரும்சொல் விளக்கம் தந்து விளக்கவுரையை குறிப்புகளுடன் எழுதி உள்ளார். நால்வர் நான்மணி மாலையிலிருந்து மாணிக்கவாசகர் பற்றிய 10 பாடல்களை வெளியிட்டதோடு, அவர் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மாணிக்கவாசகர் குறிப்பிடும் பிறப்புகளை இரு வகைகளாக விளக்கியிருப்பது அருமை. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை வகைப்படுத்தி தரப்பட்டுள்ளன.திருவாசக உரைகளை ஆய்ந்து அரிய செம்பொருள் விளக்கம் தந்துள்ளார். கீர்த்தித் திரு அகவல் பகுதியில் சிவபெருமானின் பெருமை விளக்கப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்னும் வாக்கை உணரலாம்.
- பேராசிரியர் இரா.நாராயணன்
03. பாம்பன் சுவாமிகள்
ஆசிரியர்: பா.சு.ரமணன்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,
21, லட்சுமி சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 148 விலை: ரூ.160
ராமநாதபுரம் பாம்பனில் அப்பாபுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை சென்றவர். கற்றறிந்ததை அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமாரஸ்தவமாக மக்களுக்கு அருளியவர். அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது. வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக, மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள். இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் கேட்க, ஆம் என்று சொன்னதற்காக முருகப்பெருமானே கடிந்து கொண்டதால் இறுதி வரை பழநி செல்லவில்லை. அதேநேரத்தில் காணக்கிடைக்காத ஒரு அதிசய இடத்தை, முருகனே அழைத்துச் சென்று காண்பிக்கும் வரம் பெற்ற அதிசய மகான் இவர். எழுத்தும், இறையுமாக வாழ்ந்த மகானின் வரலாற்றை படிப்பது, கந்தனை வணங்குவதற்கு சமம் என்பதை விளக்கியுள்ளார் ஆசிரியர் ரமணன்.
- எம்.எம்.ஜெ.,