சரஸ்வதிவிளாகம் கோவிலில் சிறப்பு ஹோமம்: குழந்தைகளுக்கு வித்தியாரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2020 04:10
மயிலாடுதுறை: சீர்காழி அருகே சரஸ்வதி விளாகம் கோவில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு உற்சவமும் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் இக்கோயில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டது. அப்போது குருக்கள்கள் வேத மந்திரம் ஓத ஓதுவார்கள் தேவாரம் இசைக்க குழந்தைகள் அரிசி மணிகளில் எழுத, அவர்களது நாவில் கோவில் அர்ச்சகர் தேன் கொண்டு தமிழின் முதல் எழுத்தான அ. வை எழுதினார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.