பதிவு செய்த நாள்
26
அக்
2020
10:10
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரம் சீரடி ஸ்ரீசாய் பைரவர் திருக்கோவிலில், 24 மணி நேரமும் தொடர்ந்து எரியும்படியான துனி திறப்பு விழா, இன்று மதியம், 12.00 மணிக்கு நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில், சீரடி ஸ்ரீ சாய் பைரவர் திருக்கோவில் உள்ளது. சீரடி சாய் பகவான் மகா சமாதி அடைந்த விஜயதசமி நாளான இன்று இங்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துனி, எப்பொழுதும், தொடர்ந்து எரியும்படியான ஏற்பாடுகள் துவக்கப் படுகின்றன. நிகழ்ச்சியையொட்டி, இன்று காலை, 6.00 மணிக்கு ஆரத்தி, தொடர்ந்து, ஸ்தவன மஞ்சரி பாராயணம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நடக்கிறது. காலை, 10.00 மணிக்கு சாயி சத்சரிதம் பாராயணம் நடக்கிறது. இதில், திருக்கோயில் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க உள்ளனர். காலை, 11.00 மணிக்கு பஜனை தொடர்ந்து, சங்கல்ப பூஜை நடக்கிறது. பூஜையை நரசிம்ம அய்யங்கார் நடத்துகிறார். நிகழ்ச்சிக்கு, கோவில் நிறுவன தலைவர் சாய் செந்தில் தலைமை வகிக்கிறார். மதியம், 2.00 மணி முதல் லட்சார்ச்சனை நடக்கிறது. மாலை, 3.00 மணிக்கு பஜனை, தொடர்ந்து கோமாதா பூஜை, விளக்கு பூஜை, கூட்டு பிரார்த்தனை, ஆரத்தி, பல்லக்கு, ஊர்வலம் ஆகியன நடக்கின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செல்வபுரம் சீரடி சாய் பைரவர் திருக்கோயில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.