பாலக்காடு: விஜயதசமி நாளான இன்று கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகளின் அடிபடையில் பாலக்காட்டில் உள்ள பல கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் நடந்தது.
பாலக்காடு மாவட்டம், கல்லேகுலங்கரை பகவதி அம்மன், படிஞ்சாறை யாக்கிரை மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் மூலஸ்தானம், கொடுந்திரப்புள்ளி கிராமம் ஸ்ரீ பெருமாள், புத்தூர் திருப்புராய்க்கல் பகவதி அம்மன் உட்பட கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெற்றோர்-குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் விதமாக, பெற்றோர்கள் மடியில் அமர வைத்து குழந்தைகளின் நாக்கில், தங்க மோதிரத்தால் அட்சரம் எழுதி, ஓம் ஹரி ஸ்ரீ கணபதி நம என, குழந்தைகளின் கையைப்பிடித்து பச்சரிசியில் எழுத வைத்தனர்.