பதிவு செய்த நாள்
26
அக்
2020
06:10
கூடலூர்: கூடலூர் பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும், நெற்கதிர் அறுவடை திருவிழா எளிமையாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் பனியர் இன பழங்குடி மக்கள் நெற் பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலான், பாரம்பரியமாக பூ புந்தரி எனப்படும் அறுவடை திருவிழா நேற்று, எளிமையாக நடந்தது. பழங்குடி மக்கள், நம்பாலக்கோட்டை வெட்டக்கொருமகன் கோயிலில் நடந்த, சிறப்பு பூஜையில் பங்கேற்று, ஊர்வலமாக புத்தூர்வயல் வந்தனர். அங்குள்ள வயலில், பாரம்பரிய இசையுடன் பூஜை செய்து, அறுவடை நிகழ்ச்சியை துவங்கினர். 10 நாட்கள் விரதம் இருந்த ஆண்கள் நெற்கதிர் அறுவடை செய்து, அதனை ஊர்வலம், வட்டபாறை பாகவதி அம்மன் கோவில் எடுத்து வந்து, பூஜை செய்தனர்.
அங்கிருந்து, நெற்கதிர் கட்டுகளை புத்தூர் வயல் மகாவிஷ்ணு, பகவதி அம்மன், மங்குழி பகவதி அம்மன், சுல்லி குன்னு பகவதி அம்மன், தேவாலா வேட்டைகொருமகன் கோவில்களுக்கு தனித் தனியாக எடுத்து சென்றனர். இறுதியாக நம்பாலாகோட்டை வேட்டைகொருமகன் கோவிலுக்கு, நெற்கதிர் கட்டை எடுத்து சென்றனர். அங்கு நெற்களுக்கு சிறப்பு பூஜை செய்து, விவசாயிகளுக்கு அதனை பிரசாதமாக வழங்கினர். பழங்குடி மக்கள் கூறுகையில், நடப்பு ஆண்டு கொரோனா தொற்று காரணமாக விழா எளிமையாக கொண்டாடப்பட்டது என, கூறினார்.