தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பஸாராவில் சரஸ்வதி மூலவராக கோயில் கொண்டிருக்கிறாள். மஞ்சள் பூசியிருக்கும் இந்த அம்மனுக்கு சரஸ்வதிபூஜையன்று விசேஷ பூஜை நடக்கும். மகரிஷி வியாசர் கோதாவரி நதிக்கரையிலுள்ள குமராஞ்சலா மலைப்பகுதியில் தவம் மேற்கொண்டார். அவருக்கு காட்சியளித்த சரஸ்வதி ஞானம் அளித்ததோடு, ‘‘ நான் எழுந்தருளிய இத்தலத்தில் மகாலட்சுமி, மகாகாளியுடன் என் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக’’ எனக் கட்டளையிட்டாள். அதன்படி வியாசரும் பிரதிஷ்டை செய்ய இத்தலத்திற்கு ‘வியாசபுரி’ எனப் பெயர் வந்தது. காலப்போக்கில் ‘வஸாரா’ எனத் திரிந்து தற்போது ‘பஸாரா’ என்றானது. மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் இருக்கும் இக்கோயிலுக்குள் நுழைந்ததும் சூர்யேஸ்வர சுவாமி என்னும் பெயரில் சிவன் சன்னதி உள்ளது. தினமும் இவர் மீது சூரியக்கதிர்கள் விழுவதால் இப்பெயர் ஏற்பட்டது. கருவறையில் ஞானசரஸ்வதிதேவி வீணை, அட்சர மாலை, ஏடு தாங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறாள். இங்குள்ள மலையின் பெயரால் சரஸ்வதிக்கு ‘குமாராஞ்சல நிவாசினி’ என்றும் பெயருண்டு. அருகில் மகாலட்சுமி அமர்ந்த நிலையில் இருக்கிறாள். பிரகாரத்தில் மகாகாளிக்கு தனி சன்னதியில் இருக்கிறாள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்கு வந்து பெற்றோர் அபிஷேகம் செய்து அம்மனுக்கு வெண்பட்டு உடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். புதன்கிழமைகளில் காலை 6:00 – 7:00 மணிக்குள் நெய்தீபமேற்றி வழிபட கல்வி வளர்ச்சி ஏற்படும். ஞானசரஸ்வதியின் மீது பூசியுள்ள மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இதை சாப்பிட்டாலும், நெற்றியில் இட்டாலும் குழந்தைகளின் கற்கும் திறன் மேம்படும். சரஸ்வதி பூஜையன்று கோயிலே விழாக்கோலம் பூண்டிருக்கும். கோயிலை ஒட்டிய குகையில் வியாசருக்கு சன்னதி உள்ளது. செல்வது எப்படி * ஐதராபாத்திலிருந்து 220 கி.மீ., * நிஜாமாபாத் நகரிலிருந்து 30 கி.மீ., விசேஷ நாள்: சரஸ்வதிபூஜை, விஜயதசமி நேரம்: அதிகாலை 4:00 - மதியம் 12:30மணி, மாலை 3:00 – இரவு 8:30 மணி தொடர்புக்கு: 094411 - 29737 அருகிலுள்ள தலம்: நிர்மல் வெங்கடேஸ்வரா கோயில் 70 கி.மீ.,