பதிவு செய்த நாள்
30
அக்
2020
03:10
திருப்பூர் : பண்டிகை காலங்களில், மக்கள் கூட்டம் சேர்வதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென, வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், அக்., மாதம் முதல் வாரத்தில் இருந்தே கொரோனா தொற்ற படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த மூன்று வாரங்களாக, கொரோனா தொற்று பரவல் மளமளவென குறைந்துள்ளது.கடந்த ஒரு வார நிலவரத்தை பார்க்கும் போது, தொழிற்சாலைகளில் மட்டுமே, அதிக பாதிப்பு பரவியுள்ளது. திருப்பூரை பொறுத்தவரை, சமூகபரவல் இல்லை.தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து, கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த ஆய்வில், திருப்பூர் மாவட்டத்தின் நிலவரத்தை கேட்டறிந்தார்.கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாவட்டத்தின் கொரோனா பணிகள் குறித்த விவரங்களை சமர்ப்பித்தார். கொரோனா தடுப்பு பணி, சிறப்பு சிகிச்சை மையம், அவசர சிகிச்சை வார்டு, கொரோனா நோயாளிகள் விவரம், இறந்தோர் விவரம் என, அனைத்து விவரத்தையும் முதல்வர் கேட்டறிந்தார்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பண்டிகை காலம் என்பதால், கடைகளில் மக்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. திருப்பூரில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. பனியன் தொழிற்சாலைகளில், தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளை, மாவட்ட நிர்வாகம் நேரடியாக கண்காணிக்க வேண்டுமென, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, பண்டிகை கால கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்றும் தொழிற்சாலைகள் கண்காணிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.