ராமநாதபுரம் அருகே 134 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2020 02:11
ராமநாதபுரம் : சத்திரக்குடி அருகே வளநாட்டில் 134 ஆண்டு பழமையான திருமதில், குளம் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேளானுாரைச் சேர்ந்த ஆசிரியர் முனியசாமி தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு அக்கல்வெட்டை ஆய்வு செய்தார்.ராஜகுரு கூறியதாவது: வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் இரண்டரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட செவ்வக வடிவிலான ஒரு பலகைக் கல்லில் 11 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது. இதில், இவ்வூரை சேர்ந்த கருப்பபிள்ளை என்பவர், முருகன் கோயிலுக்கு வடக்கில் உள்ள திருக்குளத்தை உருவாக்கியதாகவும், அதன்பிறகு அவரது பேரன் குருந்த பிள்ளையாகிய தங்கச்சாமியாபிள்ளை அக்குளத்தைச் சுற்றி திருமதில் மற்றும் படி அமைத்ததாகவும் உள்ளது.
விய வருடம் சித்திரை மாதம் 29 என தமிழ் ஆண்டும், 1886, மே 2 என குறிப்புள்ளது. துரைகள் மற்றும் கடவுள் அனுக்கிரகத்தால் இது கட்டப்பட்டது என கூறியுள்ளதால் ஆங்கிலேயர் அனுமதி பெற்று மதில் சுவர் கட்டியது தெரிகிறது.பெரிய அளவிலான இக்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மதில் சுவர் மூன்று அடி அகலத்தில் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுஉள்ளது. தற்போது மதில் சுவர் முழுவதும் சேதமடைந்து விழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.