பதிவு செய்த நாள்
16
நவ
2020
08:11
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், 20-ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழா தடங்கலின்றி நடக்க வேண்டி, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு, உற்சவம் நாளை நடக்கிறது. கொரோனா ஊரடங்கால், சுவாமி மாடவீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளது. வரும், 18ல், கோவில் பரிவார தேவதையான பிடாரியம்மன் உற்சவம், 19-ல், விநாயகர் உற்சவம் நடக்கிறது. 20ல், அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்கக்கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டு விழா தொடங்குகிறது.
இதையொட்டி, பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தங்கக்கொடி மரத்தின் முன் எழுந்தருள்வர்.தொடர்ந்து கோவில் உட்பிரகாரங்களில் வெள்ளி விமானங்களில், வீதி உலா நடக்கும். வழக்கமாக ஆறாம் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கும். நடப்பாண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டு, கோவிலில் உள்பிரகாரத்தில், பஞ்ச மூர்த்திகள் உலா நடக்கிறது. வரும், 29ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.கொப்பரை சீரமைப்பு திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ௨௯ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக ஆறு அடி உயர கொப்பரை புதுப்பிக்கும் பணி, நேற்று துவங்கியது.
இதில், ஏற்றப்படும் தீபத்தை, 40 கி.மீ., துாரம் வரை பார்க்க முடியும். வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல் பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய ராடுடன் கூடிய செப்புத்தகட்டில் செய்யப்பட்டு உள்ளது.மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்து செல்ல, மேல் பாகம் நான்கு வளையம், கீழ்பாகம் நான்கு வளையம் பொருத்தப்படும். இவற்றை புதுப்பிக்கும் பணி துவங்கி உள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மலை உச்சிக்கு, 28ம் தேதி கொண்டு செல்லப்படும்.