பதிவு செய்த நாள்
16
நவ
2020
04:11
திருப்பதி : திருச்சானுார் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளான நேற்று, பல்லக்கில் கோதாதேவி அலங்காரத்தில், அலமேலுமங்கை தாயார் அருள் புரிந்தார்.
ஆந்திர மாநிலம், திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு, 11 முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது.ஐந்தாம் நாளான நேற்று, தாயார் பல்லக்கில் கோதாதேவி எனப்படும், ஆண்டாள், கோதை நாச்சியார் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.வாகன சேவை முடிந்த பின், தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.பின்னர், மிக முக்கிய வாகன சேவையான யானை வாகனத்தில்,தாயார் எழுந்தருளி அருளினார். யானை வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயர்கள், கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
லட்சுமி ஆரம் ஊர்வலம் : திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய கோவில்களில், வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கும் போது, திருமலை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும், 1008 லட்சுமி காசுகளால் ஆன, லட்சுமி ஆரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.அதன்படி, தாயாருக்கு நடந்து வரும் பிரம்மோற்சவத்தில், வாகன சேவையின் போது, தாயாருக்கு அலங்கரிக்க, லட்சுமி ஆரம் திருமலையிலிருந்து திருச்சானுாருக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.