பதிவு செய்த நாள்
17
நவ
2020 
01:11
 
 சபரிமலை: சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம்  செய்து வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள், ஒரு மண்டல காலம் என, அழைக்கப்படுகின்றன. இனி வரும், 40 நாட்களிலும் தினமும் அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நுாற்றுக்கணக்கில் மட்டுமே, பக்தர்கள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவதால், வழக்கத்தை விட மாறுபட்ட நிலை காணப்பட்டது. 
கூடுதல் பக்தர்களுக்கு அனுமதியா? சபரிமலையில், மண்டல கால ஏற்பாடுகள் தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும், கேரள ஐகோர்ட் உத்தரவின் படியும், சபரிமலையில் மண்டல காலத்தில் வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக, குடிநீருக்கு சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பையில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டரில், 200 ரூபாய் செலுத்தினால், ஸ்டீல் பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
தரிசனம் முடிந்து திரும்பும் போது, கவுன்டரில் அந்த பாட்டிலை திருப்பி கொடுத்தால் பணம் திரும்ப கிடைக்கும். சரல்மேடு, ஜோதிநகர், மாளிகைப்புறம் ஆகிய இடங்களில், பாட்டிலில் தண்ணீர் நிரப்புவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பாதையில், ஐந்து இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பையில், 20 ஆம்புலன்சுகள் உள்ளன. சபரிமலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் வந்து செல்வது கண்காணிக்கப்படும். கூடுதல் பக்தர்களை அனுமதிக்கலாம் என்ற நிலை உருவானால், சுகாதாரத்துறை மற்றும் முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.