துவங்கியது சரண கோஷம்.. மாலையணிந்தனர் ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2020 01:11
தேனி : கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல துளசி மாலையணிந்து 48 நாள் விரதத்தை நேற்று துவக்கினர்.
கொரோனா பரவல் காரணமாக கேரள அரசு சபரிமலையில் மண்டல பூஜை, மகரஜோதி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நேற்று காலை தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்தனர்.கம்பம்: சுருளி அருவிக்கு முன்புறம் உள்ள முல்லையாற்றில் குளித்து நுாற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்தனர். பூதநாராயணர் கோயில், ஆதிஅண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சண்முகநாதன்கோயில், உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் முல்லையாற்றங்கரை, கம்பம் காந்திசிலை அருகில் ஐயப்பன்கோயில், சின்னமனுார் அகில பாரத ஐயப்ப சேவா சங்க ஐயப்பன் மணி மண்டபத்தில் துளசி மாலையணிந்து விரதம் துவக்கி சரண கோஷம் போட்டனர். சின்னமனுாரில் குருசாமி லோகேந்திரராஜா, சுருளி அருவியில் கம்பம் குருசாமி நாராயணன் மாலையணிவித்தனர்.