மகிழ்ச்சியாகச் செல்லும் வாழ்வில் திடீரென சிரமங்கள் வருவதுண்டு. துன்பம் வந்தவுடன் மனிதன் துவள்கிறான். ஆனால் சிரமங்களை தாங்கிக் கொள்ளச் சொல்கிறார் நாயகம். ‘‘ஒருவருக்கு நல்லது, கெட்டது எது நடந்தாலும் நிகழ்ந்தாலும் நன்மையே. எப்படி என்றால் நல்லது நடந்தால் நன்றி செலுத்துவார். கெட்டது நடந்தால் பொறுமையை கற்றுக் கொள்வார். இதுவும் நல்லது தானே’’ என்கிறார். ஆகவே சோதனைகளை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். உள்ளம் எப்போதும் உடைந்து போகக்கூடாது. கெடுதலையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். சோதனை நெருங்கும் போது, ‘‘நாம் நிச்சயமாக இறைவனுக்காகவே இருக்கிறோம். நாம் அவனிடமே மீள்வோம்’’ என அடிக்கடி சொல்லி மனதை தேற்றுங்கள். இதன் மூலம் இறைவன் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி தருவான்.