கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு ஒன்று காணாமல் போனது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், ‘‘இந்தக் கடல் மாபெரும் திருடனாக இருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருங்கள்’’ கொஞ்சம் துாரத்தில் ஒருவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிக மீன்கள் வலையில் சிக்கின. அவர் “இக்கடல் பெரும் கொடையாளியப்பா’’ என கடற்கரையில் எழுதி வைத்தார். அந்த கடலில் நண்பர்களுடன் குளிக்க வந்தான் மாணவன் ஒருவன். அலையில் சிக்கி மூழ்கி இறந்தான். அதிக பிரியம் கொண்ட அவனது தாய் “இந்தக் கடல் இப்படி மக்களை அநியாயமாக கொன்று குவிக்கிறதே” என அழுது புலம்பினாள். வயதில் மூத்த மீனவர் ஒருவர் மூச்சடக்கி, முத்து எடுக்க ஆழ்கடலில் மூழ்கினார். அவருக்கு கிடைத்த அத்தனையும் நன்முத்துக்கள். அமோக லாபம் கிடைக்கும் என்பதால், ‘‘இந்தக் கடல் ஒன்றே போதும். என் வருங்கால சந்ததியே மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு!’’ என மகிழ்சியில் குதித்தார். இவர்களுக்கு கிடைத்த அனுபவம் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும் அத்தனையும் உண்மை. எனவே ஒருவரது வாழ்க்கை முறை, அணுகுமுறை இன்னொருவருக்கு பொருந்தாது. ஒன்றோடு ஒன்றை ஒப்பிடக் கூடாது. மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் தனித்தன்மை உண்டு. யார் எது சொன்னாலும் கேளுங்கள். உங்களுக்கு சரியென்று தோன்றுவதைச் செய்யுங்கள். * பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே. * இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.