இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் (தீர்வு சொல்பவர்) செய்பவர் தராசு போல நடுநிலையானவராக இருக்க வேண்டும் என்பர். நியாயத்தின் குறியீடான தராசை, ’துலாக்கோல்’ என்பர். தீபாவளி கொண்டாடும் மாதமான ஐப்பசிக்கு ‛துலா மாதம்’ என்று பெயர். வேண்டியவர், வேண்டாதவர் என்னும் பாகுபாடு இல்லாமல் தராசு போல நியாய வழியில் நடப்பவரே நீதிமான். உயிர்களை எல்லாம் துன்புறுத்திய நரகாசுரனை, தன் மகன் என்ற குறுகிய எண்ணத்துடன் திருமாலும், சத்தியபாமாவும் பார்க்கவில்லை. அவனை வதம் செய்து உலக உயிர்களைக் காப்பாற்றினர். நீதி உணர்வும், மன உறுதியும் வேண்டும் என்பதே தீபாவளி உணர்த்தும் பாடம்.