கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகில் உள்ள சின்னஞ் சிறிய கிராமம் சுவாமி தோப்பு. இந்த ஊரில்தான் அய்யா வைகுண்ட சுவாமிகள் திருக்கோயில் திருப்பதி உள்ளது. கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20 நாள் திருச்செந்தூர் கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், ஒரு மூர்த்தியாக - வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து, வெளியே வந்தார். அய்யா வைகுண்ட சுவாமி மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் கலி என்னும் மாய அரக்கனை அழித்து, அவர்களை தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வந்த நாராயணன் எடுத்த அவதாரமே வைகுண்ட அவதாரம். அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் பூஜையோ பூசாரியோ கிடையாது. அய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் நீ தேடும் சிவன் உனக்குள்ளேயே இருக்கின்றான். என்பதுதான். அதை குறிப்பால் உணர்த்துவதுதான் இந்த வழிபாட்டு முறை, இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்ததும் அய்யா வைகுண்டர்தான். மகாவிஷ்ணுவின் அவதாரமாக அய்யா வைகுண்ட சுவாமிகள் இருந்தபோதும் தனது அவதார திருப்பணி நிறைவுறும்வரை சிவனே அய்யா....அய்யா சிவ, சிவ, சிவ அரஹரா, அரஹரா... என ஈசனையே போற்றி துதித்தார். அரசனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிரீடம் என்று ஆண்களைத் தலையில் தலைப்பாகை கட்ட வைத்தார் அய்யா வைகுண்ட சுவாமிகள்.
அய்யா வழி பக்தர்கள் புருவ மத்தியில் இருந்து நெற்றியில் மேல் நோக்கி திருமண்ணால் நாமம் இட்டுக் கொள்வார்கள். இந்தத் திருமண், பூமிக்கு அடியில் உள்ள தூய்மையான வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சுவாமி தோப்பு பதியில் கருவறையில் ஒரு கண்ணாடி இருக்கும். அதை பார்த்து தெய்வத்தை தன்னுடைய உருவமாக நினைத்து வழிபட வேண்டும். இங்கே தினமும் மூணு வேளை சமபந்தி அன்னதானம் நடக்கும், பிச்சை எடுத்து மிச்சம் இல்லாமல் தர்மம் செய் இதுதான் அய்யா வைகுண்ட சுவாமியின் தத்துவம். இத்தகு மகிமைகள் மிக்க சுவாமிதோப்பில், வைகாசி திருவிழா இனிதே நடைபெற்றது.