பதிவு செய்த நாள்
28
மே
2012
10:05
திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமியின் தங்கக்கொடி மரத்தில், அர்ச்சகர்கள் நந்தி கொடியேற்றியதை தொடர்ந்து, ஸ்வாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (மே 29) ஸ்வாமிகள், மலையில் இருந்து நகருக்குள் பிரவேசம் செய்கின்றனர்.ஜூன் 3ம் தேதி, அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமி காலை 10 மணிக்கு தனது பரிவாரங்களுடன் பெரிய தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அன்று மாலை 6 மணிக்கு, விநாயகர், செங்கோட்டுவேலவர் திருத்தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.ஜூன் 4ம் தேதி, பத்தாம்நாள் விழாவாக, அர்த்தநாரீஸ்வரர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. ஜூன் 8ம் தேதி 14ம் நாள் விழாவாக அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமி, தனது பரிவாரங்கள் புடைசூழ திருமலைக்கு எழுந்தருளுகிறார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.