பதிவு செய்த நாள்
20
நவ
2020
03:11
திருமங்கலம் : மதுரை உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு,மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் முனீஸ்வரன், லட்சுமணமூர்த்தி, உச்சப்பட்டி சூரியபிரகாஷ் ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர். ராஜகுரு, முனீஸ்வரன் கூறியதாவது: 2 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்ட ஒரு பலகை கல்லில்ஒரு வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போன்று புடைப்பு சிற்பம் உள்ளது. வலது கையில் ஈட்டியும், இடது கையில் குதிரையின் கடிவாளத்தையும் பிடித்தபடி உள்ளது. கைகளின் மேல் காப்பும், கழுத்தில் சிறிய மாலையும், தொடைவரை ஆடையும், தலையில் சிறிய கொண்டையும் உள்ளது. வடக்கு நோக்கி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதால், போரில் வீரமரணமடைந்த குதிரை வீரனுக்கு அமைக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். இவரை அய்யனாராக ஊர்மக்கள் வழிபடுகின்றனர்.அதன் அருகில் கிழக்கு நோக்கியவாறு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்தகன்னியரின் புடைப்பு சிற்பம் உள்ளது.
குதிரை வீரன், சப்தகன்னியர் சிற்பங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள மேடையின் கீழ் பகுதியில் ஒரு பலகைக் கல்லில் லிங்கம், சூரியன், சந்திரன், சூலம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. அருகில் பாறை மேல் 10 அடி உயர கல் பீடத்துடன் கூடிய ஒரு தீபத்துாண் உள்ளது. இதை பெருமாள் கோயிலாக மக்கள் வழிபடுகிறார்கள். பீடத்தில் கி.பி.18-ம் நூற்றாண்டின் சேதமடைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதன் மூலம் நேர்த்திக்கடனாக பீடம் அமைத்துக் கொடுத்திருப்பதை அறிய முடிகிறது. இத்தூணில் இதற்கு முன் இருந்து உடைந்துபோன பழைய கற்கள் கீழே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் விஜயநகர அரசின் சின்னமான வராகமும், மற்றொன்றில் வணங்கிய நிலையில் ஒருவரும், சங்கும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. மதுரையில் விஜயநகர மன்னர்கள் ஆட்சி உருவானபின் ஆந்திராவிலிருந்து வந்த மக்களின் குடியிருப்பு இவ்வூரில் உருவாகியிருக்கிறது என்றனர்.