சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2020 04:11
தஞ்சாவூர், சுவாமிமலையில் திருக்கார்த்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. மூர்த்தி,தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோவிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இக்கோவிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன. இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து வரும் 23,24 ஆகிய தினங்களில் ஊஞ்சல் உற்சவமும், 25,26-ம் தேதிகளில் சுவாமி உள்பிரகார புறப்பாடும், 29-ம் தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடு, சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.