பதிவு செய்த நாள்
21
நவ
2020
05:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகருக்குள், வரும், 28, 29ல் வெளியூர் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது, என, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இது குறித்து அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: கார்த்திகை தீப திருவிழாவுக்கு, வரும், 20ல்(நாளை) அதிகாலை, 5:30 முதல், 7:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. டிச., 3 வரை, 13 நாட்கள், பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். வரும், 26ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், ஆகம விதிப்படி கோவில் வளாகத்துக்குள் நடக்கும். விழா நாட்களில், ஆன்லைன் மூலம், 5,000 பேர், ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்கள், முன்னுரிமை அடிப்படையில், 3,000 பேர் என, நாள் ஒன்றுக்கு, 8,000 பேர், காலை, 6:30 முதல் மாலை, 6:30 மணி வரை, ஆறு கட்டங்களாக, சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தீப திருவிழாவுக்கு ஸ்பெஷல் பஸ் இயக்கப்படாது. வரும், 28 மற்றும், மஹா தீபம் நடக்கும், 29ல் வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலைக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. நகர எல்லைக்குள், 18 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, அங்கேயே தடுக்கப்படுவர். திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்தவர்கள் வர தடை இல்லை. அவர்கள், தங்கள் அடையாள ஆவணங்களை செக்போஸ்டில் காண்பிக்க வேண்டும். மேலும், 28, 29ல் கிரிவலம் செல்ல தடை செய்யப்படுகிறது. மஹா தீபத்தன்று கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.