பதிவு செய்த நாள்
21
நவ
2020
05:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்ய கூடுதலாக, பக்தர்களை அனுமதிக்கக்கோரி, ஹிந்து முன்னணி சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. கடந்த, 17 முதல், ஆன்லைனில் பதிவு செய்த, 5,000 பேர் மட்டுமே கோவிலினுள் சென்று, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். கொரோனா ஊரடங்கால், கோவிலினுள் ஐந்தாம் பிரகாரத்தில் மட்டுமே சுவாமி உலா வருகிறது. இதை தரிசனம் செய்ய பக்தர்களை இதுவரை அனுமதிக்கவில்லை. வரும், 29ல், மஹா தீபத்தன்று பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தங்க கொடிமரம் முன், ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வும் நடக்கிறது. சுவாமி பிரகார வலத்தை கூடுதலான பக்தர்கள் தரிசனம் செய்யவும், மகா தீபத்தன்று கோவிலினுள், பஞ்ச மூர்த்திகள் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்யவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அருண்குமார் மற்றும் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.