பதிவு செய்த நாள்
22
நவ
2020
12:11
பழநி:கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ., 15ல் யாகபூஜை, காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. கோயில் யானை கஸ்துாரி மலைக்கோயிலில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது. நேற்று முன்தினம் நான்கு கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நடந்தது.நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மலைக்கோயிலில் விநாயகர் பூஜையுடன், கும்பகலசங்கள் வைத்து யாகபூஜையும், சண்முகர், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகமும் நடந்தன. மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 8:00மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானை அருள் பாலித்தனர்.மாலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், டி.எஸ்.பி., சிவா உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். பக்தர்களை அனுமதிக்கவில்லை.