பதிவு செய்த நாள்
22
நவ
2020
05:11
மயிலாடுதுறை:லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், நேற்று அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
நாகை மாவட்டம், பொறையாறு அருகே, அனந்தமங்கலத்தில், ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் மகா மண்டபத்தில் இருந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகிய நான்கு பழமையான சிலைகள், 1978ம் ஆண்டு நவம்பர், 23ம் தேதி திருட்டு போனது.இவ்வழக்கு, 1988ம் ஆண்டு ஜனவரி, 25ம் தேதி, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. திருட்டு போன ராமர், லட்சுமணர், சீதை சிலைகள், லண்டனில் இருப்பதை கண்டறிந்த தமிழக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதற்கான ஆதாரங்களை, பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர்.லண்டன் போலீசார் சிலைகளை மீட்டு,இந்திய துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்தியா கொண்டு வரப்பட்ட சிலைகள், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் சிலைகள் காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்ட சிலைகள், நேற்று காலை, அனந்தமங்கலம் எடுத்துவரப்பட்டன.அப்பகுதி மக்கள், மங்கள இசை முழங்க வரவேற்று, சிலைகளை கோவிலில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, சிலைகள் பாதுகாப்பாக, கோவிலுக்குள் வைத்து பூட்டப்பட்டன. அப்பகுதி மக்கள், ஆஞ்சநேயர் சிலையையும் மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.